தினத்தந்தி 07.12.2013
குடியாத்தத்தில் ராபின்சன் குளம் சீரமைப்பு பணிகள் நகராட்சி தலைவர் அமுதா நேரில் ஆய்வு
குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் சுமார் 7.61 ஏக்கர் பரப்பளவில் ராபின்சன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றி தூர்வாரி, மழைநீர் சேகரிப்பு, சுற்றிலும் பூங்கா, விளையாட்டு திடல், நடைபாதை அமைப்பது என முடிவு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
ராபின்சன் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற அரசின் தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரோட்டரி சங்கத்தின் பங்களிப்புடன் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் குப்பை தூர்வாரும் பணி தொடங்கியது. தற்போது 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அரசின் கட்டமைப்பு, இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதி மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு, கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளது. இதில் தற்போது ரூ.30 லட்சம் செலவில் குளத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நகராட்சி தலைவர் எஸ்.அமுதா நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது ஆணையாளர் (பொறுப்பு) ஜி.உமாமகேஸ்வரி, நகரமன்ற துணை தலைவர் மோகன்ராஜ், கவுன்சிலர்கள் எஸ்.கே.சுரேஷ், வி.என்.கார்த்திகேயன், கம்பன், ரவி, ஏ.கார்த்தி, பணி மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.