தினகரன் 10.12.2013
கோமதிபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
மதுரை, : கோமதிபுரம், யாகப்பா நகர் பகுதிகளில் சுகாதார பணிகளை மாநகராட்சி ஆணையர் கிரண் குராலா பார்வையிட்டார்.
மதுரை கோமதிபுரம் பாரதியார் நகர் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புகளுக்கு சிறிய குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதனால் குழாய்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது. இது குறித்து மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று ஆணையாளர் கிரண்குராலா அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். பெரிய குழாய் பதித்து நிரந்தர தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்பு யாகப்பா நகரில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பார்வையிட்டு வீடுகளின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும், நீரில் அபேட் மருந்து ஊற்றும்படியும், கொசுவை ஒழிக்க மருந்து அடிக்கும்படி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வில் உதவி ஆணையாளர் தேவதாஸ், நகர் நல அலுவலர் யசோதாமணி, செயற்பொறியாளர் திருஞானம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.