தினகரன் 17.12.2013
மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்
சென்னை, : வில்லிவாக்கத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடத்தை இடித்து, நிலம் மீட்கப்பட்டது.
வில்லிவாக்கம் பெருமாள் கோயில் தெற்கு மாடவீதியில், சத்துணவு கூடம் உள்ளது. இதன் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை, தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் அந்த நபரிடம் விளக்கம் கேட்டபோது, அது தனது இடம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக மாநகராட்சி சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதையடுத்து, நேற்று காலை 8வது மண்டல செயற் பொறியாளர் முனியப்பன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிக்கு வந்தனர். பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து, நிலத்தை மீட்டனர்.
ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக அதிகாரிகள் வந்ததால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.