தினமணி 18.12.2013
பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பவானி நகராட்சிக்குச் சொந்தமான சாலைகள், சாக்கடைகள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
27 வார்டுகள் கொண்ட பவானி நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் நிரந்தர மற்றும் தாற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிமாகக் காணப்பட்டன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார்கள் சென்றன. இந்நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முதல்கட்டமாக, காமராஜர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டன. படிப்படியாக அனைத்து வார்டுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன.
நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி தலைமையில், துப்புரவு அலுவலர் சிவகுமார், கட்டமைப்பு ஆய்வாளர் பி.முருகேசன், நகர அளவையாளர் சம்பத் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.