தினகரன் 27.12.2013
மாநகராட்சி குறைதீர் கூட்டம் சாலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவு
திருச்சி, : திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மேயர் ஜெயா தலைமை வகித்தார். ஆணையர் தண்டபாணி முன்னிலை வகித்தார். சாலை மேம்பாடு, ஆக்ரமிப்பு அகற்றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழிவறை மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 15 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பழுதடைந்த தெருவிளக்குகளை விரைந்து பழுது நீக்கம் செய்திடவும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொண்டு முழுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இதுகுறித்து மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.