தினகரன் 28.12.2013
சினிமா போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்படும்
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி மாதாந்திர கூட்டம் சேர்மன் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. ஆணையர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். 33 கவுன்சிலர்கள் உள்ள போதும் 15 பேர் மட்டும் குறிப்பட்ட நேரத்திற்கு வந்ததால் அறை மணி நேரம் தாமதமாக கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்ய புதிய ஜெனரேட்டர், சாலை, குடிநீர் பம்ப் மோட்டார் வாங்குவது உள்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகள்:
அதிமுக நகரமன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ்: திண்டிவனத்தில் மறைந்த அரசியல் தலைவர்கள் சிலைகள் பல இருந்தபோதும், எம்ஜிஆர் சிலை வைக்கப்பட வில்லை. நகர மையப்பகுதியில் ஆய்வு செய்து நகராட்சி மூலம் திருவுருவ சிலை நிறுவ வேண்டும்.
அதிமுக நகரமன்ற உறுப்பினர் சுதாகர்: திண்டிவனம் நகரில் பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச போஸ்டர்கள், விளம்பர பலகைகள் வைப்பதை நகராட்சி தடை செய்ய வேண்டும். கல்வி நிலையம் அருகே உள்ள மதுபான கடைகளை மூடவேண்டும்.
சமீபகாலமாக வாகன திருட்டு, தொடர் கொள்ளைகள், சமூக விரோத செயல்களால் திண்டிவனம் நகர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸ் நியமிக்க வேண்டும்.
அதிமுக நகரமன்ற உறுப்பினர் பாலசந்திரன்: காவிரி நதிநீர், டெல்டா விவசாயிகள் பிரச்னை மற்றும் மின் பற்றாக்குறைகளை பற்றி பேசுவதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு 10 நிமிடம் மட்டும் கொடுத்த மத்திய காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பாமக நகரமன்ற உறுப்பினர் ஜெயராஜ்: திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் எங்கு அமையும்.
சேர்மன் வெங்கடேசன்: வக்ப் போர்டு இடத்தில் நகராட்சி மூலம் மீண்டும் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
ஆபாசம் மற்றும் அங்கங்கே சினிமா போஸ்டர்கள் ஒட்டுவது, திருமண மண்டபங்களில் இருந்து இலை, குப்பைகளை தெருவில் கொட்ட தடைவித்து நோட்டீஸ் அனுப்பப்படும்.
2013 புதுவருடத்தில் நகரை தூய்மைப்படுத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கு புது வருட வாழ்த்துகள்.