தினமணி 31.12.2013
பாதாள சாக்கடையில் பில்டர் அமைக்காத உணவு விடுதிக்கு மாநகராட்சி அபராதம்
மதுரையில் பாதாள சாக்கடையில் பில்டர் அமைக்காத உணவு விடுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4-இல் டவுன்ஹால் சாலை பகுதியில், அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடி சுகாதாரக்கேடு உருவாகி வருவதாக, ஆணையாளர் கிரண்குராலாவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் அ.தேவதாஸ் தலைமையில் மாநகராட்சி உதவி நிர்வாகப் பொறியாளர் சேகர், பாதாளசாக்கடை மேற்பார்வையாளர் சக்திவேல் மற்றும் ஊழியர்கள் திங்கள்கிழமை டவுன்ஹால் சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குள்ள உணவு விடுதி ஒன்றில் பாதாள சாக்கடையில் பில்டர் அமைக்காமலும், காய்கறி கழிவுகள் மற்றும் உணவுக் குப்பைகளை கால்வாயில் கொட்டியதாலும் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலையில் ஓடியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த உணவு விடுதிக்கு உதவி ஆணையாளர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும், பாதாள சாக்கடையில் பில்டர் அமைக்காமல் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் மற்றம் காய்கறி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கால்வாய்களில் கொட்டி அடைப்பை ஏற்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதோடு, கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையாளர் அ.தேவதாஸ் தெரிவித்தார்.