தினமணி 31.12.2013
நகராட்சிக் கடைகளை உள் வாடகைக்கு விட்டால் உரிமம் ரத்து: ஆணையர்
தாராபுரம் நகராட்சிக்குச் சொந்தமானக் கடைகளை ஏலம் எடுத்த பின் உள் வாடகைக்கு விட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆணையர் க. சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை கூறியது:
நகராட்சிக்குச் சொந்தமான 207 கடைகள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 7-ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளன. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் குடும்ப அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் கொடுக்க வேண்டும். அதிகத் தொகைக்கு ஏலம் கோருவதை தவிர்க்கும் பொருட்டு, வைப்புத் தொகை ஓராண்டு வாடகை என்பதை இரண்டு அல்லது மூன்றாண்டுகள் என மாற்றி அமைக்கப்படும். பெயர் மாற்றம் செய்து ஒன்பது ஆண்டுகளான கடைகள் மட்டுமே ஏலத்தில் விடப்படும். ஏலம் நடத்தப்படும் போது கருத்து முரண்பாடு ஏற்பட்டால் ஆணையரின் முடிவே இறுதியானது.
தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வைப்புத் தொகை சூழ்நிலை கருதி மாற்றவும் வாய்ப்பு உள்ளது. பேருந்து நிலையக் கடைகளில் டீக்கடை மற்றும் இறைச்சிக் கடைகள் நடத்த அனுமதியில்லை. கடைகளை ஏலம் எடுத்த பின் உள் வாடகைக்கு விட்டால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். பொது ஏலம் நியாயமாகவும், நேர்மையுடன் நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஏலத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.