Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மருதமலைக்கு ரோப்கார் வசதி கோவை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன்            31.12.2013

மருதமலைக்கு ரோப்கார் வசதி கோவை மாநகராட்சி அறிவிப்பு

கோவை, : மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலுக்கு ரோப்கார் வசதி செய்து தரப்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி தலைமை தாங்கினார். கமிஷனர் லதா முன்னிலைவகித்தார். இதில், மேயர் பேசியதாவது:

மாநகரில் மின்சேமிப்புக்காக, கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது. இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி. கோவை மாநகரில் பில்லூர் 2வது குடிநீர் திட்டம், கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் அமலுக்கு வந்தபிறகு குடிநீர் பிரச்னை தீர்ந்துள்ளது. வீதிகளில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்துவது அடியோடு நின்றுவிட்டது. நகரில், பிளாஸ்டிக் குப்பைகள் சுகாதார மேம்பாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதை அடியோடு ஒழிப்பதில் மாநகராட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. முதல்கட்டமாக, நகரில் தேங்கும் பிளாஸ்டிக் குப்பைகள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது.

தினம் 7 டன் குப்பை சேருகிறது. இவற்றை தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் நிதி துப்புரவு பணியாளர் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. விரைவில், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் குப்பை அடியோடு ஒழிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் உள்ள என்.எச்.ரோட்டில் சாலை விரிவுபடுத்தப்படும். இதற்காக, கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்படும். பக்தர்களின் நலனை கருத்தில்கொண்டு மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தரப்படும். இதற்காக, தமிழக அரசின் உதவியை கோவை மாநகராட்சி நாடியுள்ளது. விரைவில் பணி துவங்கும்.

இவ்வாறு மேயர் பேசினார்.

ஆலைகளுக்கு பூட்டு: கவுன்சிலர் மீனா லோகநாதன் (திமுக) பேசுகையில், ‘‘பிளாஸ்டிக் கழிவைப்போல், கோழிக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்தை பேண எவ்வளவு நிதி வேண்டுமானாலும் செலவு செய்யலாம்‘‘ என்றார். கவுன்சிலர் நந்தகுமார் (திமுக) பேசுகையில், ‘‘துடியலூரிலும், இருகூரிலும் பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இதை மூட வேண்டும். மாநகராட்சி டூவீலர், கார் பார்க்கிங் பகுதியை சிலர் ஏலம் எடுத்து, அத்துமீறுகின்றனர். இந்த இடங்களை முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும். பொது இடங்களில் கட்டட கழிவு கொட்டுவோரை கண்காணித்து பிடிக்க, தனிப்படை அமைக்கவேண்டும்’’ என்றார். கவுன்சிலர் லட்சுமி இளஞ்செல்வி (திமுக) பேசுகையில், ‘‘மாமன்ற கூட்டம் தொடர்பான அறிவிப்பை கவுன்சிலர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமும் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

46 தீர்மானங்கள்

கூட்டத்தில், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் ரூ.12.65 கோடியில் புதிய மாமன்ற கூட்ட அரங்கம் கட்டப்படும். மாநகராட்சி பள்ளி விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தி, விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும். மாநகரில் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வதை தடுக்கும் வகையில் 21 இடங்களில் ‘நம்ம கழிப்பிடம்‘ கட்டப்படும். புதிதாக குடிநீர் இணைப்பு கோரிய விண்ணப்பங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் ரூ.200, உற்பத்தியாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். சிவானந்தாகாலனி வணிக வளாகத்தில் ‘பண்ணை பசுமை காய்கறி திட்டம்‘ கடை அமைக்கப்படும். மாநகராட்சி வணிக வளாகங்களுக்கு வாடகை உயர்வு செய்தல், வடவள்ளியில் 47 சென்ட் நிலத்தில் பேருந்து திருப்பு முனையம் அமைத்தல், மாநகராட்சி குப்பை கிடங்கில் மருத்துவ கழிவு கொட்டுவோருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தல், மாநகராட்சி பள்ளிகளில் பசுமை படை-காய்கறி தோட்டம் அமைத்தல் உள்பட 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.