தினமணி 04.01.2014
குடிசைமாற்று குடியிருப்பு திட்டப் பணி: ஆட்சியர் ஆய்வு
சின்னமனூரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டு வரும் குடிசைமாற்று குடியிருப்புகளை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சின்னமனூர் நகராட்சிக்கு மத்திய அரசின் நகர்புற அமைச்சகம் மூலம் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய குடியிருப்பு மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.12 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சின்னமனூரில் 14 குடிசைப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு 950 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய குடியிருப்பு கட்டுமானப் பணி, பாதாளச் சாக்கடை இணைப்பு பணி, பொன்நகரில் நடைபெற்று வரும் தார்ச் சாலை, பேவர் பிளாக் கல் சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சமுதாயக் கூடம் கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் அப்துல்ரசீத், பொறியாளர் சரவணக்குமார், பணி மேற்பார்வையாளர் செல்லத்துரை ஆகியோர் உடனிருந்தனர்.