தினமணி 04.01.2014
பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை: அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமையவுள்ள இடங்களில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்க ரூ. 147 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழக அரசு 50 சதவீதம் தொகையான ரூ. 72 கோடியை ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கியுள்ளது. தற்போது நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்படுவதால் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான ரூ. 147 கோடியில் மீதமுள்ள 50 சதவீதம் தொகையை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
திட்டத்துக்கான முழுத் தொகையையும் மானியமாகப் பெற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, நகராட்சிக் கூட்டத்தில் முழு மானியம் பெற அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், பாதாள சாக்கடைத் திட்டம் அமைவதற்கான இடங்களை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜேந்திரன், உதவி மேலாளர்கள் ஜஸ்டீன், கார்த்திகேயன், சுற்றுச் சூழல்-சமூக மேலாளர்கள், சித்ரா, சிவராமன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார், ஆணையாளர் சுந்தராம்பாள், நகராட்சிப் பொறியாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.