தினமணி 04.01.2014
வைகுண்ட ஏகாதசி அடிப்படை வசதிகள்: மேயர் ஆய்வு
சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவுக்கு மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மேயர் அ. ஜெயா வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிறீரங்கம் பகுதியில் 12 இடங்களில் 39 தாற்காலிக கழிப்பறைகள், 2 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 7 பொது குடிநீர் குழாய்கள் மற்றும் வீட்டு இணைப்புகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
சிறீரங்கம் சாலைரோடு, திம்மராயசமுத்திரம் ஆகிய இரு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மேயர் அ. ஜெயா வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
மேலும், காந்தி சாலை ஓரத்தில் 5 அடி அகலத்தில் ரூ. 30 லட்சத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, அடையவளைஞ்சான் வீதி பிரசன்னா மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ. 30 லட்சத்தில் கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தையும் மேயர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, துணை மேயர் மரியம் ஆசிக், கோட்டத் தலைவர் எம். லதா, நகர்நல அலுவலர் டாக்டர் மாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.