தினமணி 21.01.2014
வரி பாக்கியை செலுத்தா விட்டால் ஜப்தி நடவடிக்கை: நகராட்சி ஆணையர்
சிவகங்கை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியினை உடனடியாக செலுத்தி, ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்க ஆணையர் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து நகராட்சி ஆணையர் க. சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவகங்கை நகராட்சிக்குச் சொந்தமான உழவர் சந்தை கடை எண் 5க்கு 2010-11 பிப்ரவரி முதல் 2013 டிசம்பர் முடிய வாடகை பாக்கி ரூ.25,550-ம், பேருந்து நிலையம் மாடி கண்ணாடிக் கடைக்கு 2005-06 ஜூன் முதல் 2010-11 டிசம்பர் வரை ரூ.1.09 லட்சம் வாடகை நிலுவையாக இருந்து வந்துள்ளது.
இந்த கடைக்காரர்கள் வாடகை பாக்கியை நகராட்சிக்கு செலுத்தாததால் இரு கடைகளையும் நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை பாக்கியை தவறாமல் செலுத்த வேண்டும். தவறினால் கடை பூட்டி சீல் வைக்கப்படும். மேலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகிய வரியினங்களை பொதுமக்கள் நிலுவையின்றி உடனடியாக செலுத்த வேண்டும்.
மார்ச் மாதம் தான் கடைசி தேதி என எண்ணி இருப்பது தவறு. சொத்து வரி செலுத்தும் முறை இரண்டாம் அரையாண்டு சேர்த்து அக்.30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
ஆனால் பொதுமக்கள் இந்த விவரம் தெரியாமல் மார்ச் மாதம் வரை கால அவகாசம் உள்ளதாக கருதுகின்றனர்.
எனவே நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கியினை உடனடியாக நிலுவையின்றி வசூல் மையத்தில் செலுத்த வேண்டும்.
தவறினால் நகராட்சி சார்பில் ஜப்தி நடவடிக்கை, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.