தினகரன் 23.01.2014
கீழ்குந்தா பேரூராட்சியில் வரியினங்களை 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்
மஞ்சூர், : கீழ்குந்தா பேரூராட்சியில் குடிநீர், மற்றும் சொத்து வரிகளை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது:
கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், மற்றும் உரிம கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை இதுவரை செலுத்தாதவர்கள் வரும் 31ம் தேதிக்குள் கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி பேரூராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இது குறித்த ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 31.01.2014ம் தேதிக்கு பின்னர் வரி மற்றும் கட்டணங்கள் பாக்கியுள்ள நபர்கள் மீது 1920-ம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்ட பிரிவின் கீழ் மேல் நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே குறிப்பிட்ட கால கெடுவிற்குள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி நடவடிக்கையை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.