தினகரன் 23.01.2014
சுகாதார பணிகளை மேற்கொள்ள குன்னூர் நகராட்சியில் புதிய கமிட்டி
குன்னூர், : மனித கழிவுகளை மனிதனே அப்புறப்படுத்த கூடாது என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளதை அடுத்து மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பான உத்தரவின் பேரில் குன்னூரில் ஆர்டிஓ, நகராட்சி ஆணை யம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கழிவறை கழிவுகளை எக்காரணத்தை கொண்டும் பொது கழிவு கால்வாயில் விடக்கூடாது எனவும் இதற்காக ஒவ்வொரு குடியிருப்பிலும் செப்டிக் டேங்க் ஏற்படுத்த வேண்டும் மற்றும் மற்றும் மனித கழிவுகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உறைகள் அணிந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க குன்னூர் நகராட்சி சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தலைவராக ஆர்டிஒ செயல்படுவார். நகராட்சி ஆணையர், மக்கள் பிரதிகளில் 2 பேர் சமூக ஆர்வலர்கள் 2 பேர், ஒரு ரயில்வே ஊழியர், 2 துப்புரவு பணியாளர் ஆகியோர் அடங்கிய கமிட்டியினர் இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் துண்டு பிரசுரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான பணிகளை நகராட்சி ஆணையர் ஜான்சன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நகரப்பகுதியிலுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தனிக்கழிவறை இல்லாமல் கழிப்பிட கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் நேரடியாக குழாய்கள் மூலம் விடுவது கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தனிக்கழிவறை ஏற்படுத்தாவிட்டால் அவர் கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், புதியதாக கட்டட அனுமதி கோரும் அனைத்து விண்ணப்பங்களிலும் கழிவறை குறித்த விவரம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.