தினகரன் 22.01.2014
வாகன குடிநீர் கட்டணம் உயர்வு பொதுமக்கள் கருத்து கூறலாம் நகராட்சி அறிவிப்பு
திண்டுக்கல், : திண்டுக்கலில் வாகன குடிநீர் கட்டணம் உயர்வையடுத்து பொதுமக்கள் கருத்து கூற நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் நகர்மக்களுக்கு ஆத்தூர் காமராஜர்அணை, காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நகராட்சி நிர்வாகம் மூலம் அன்றாடம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதிய மழையில்லாத காரணத்தினால் நகர்பகுதியில் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள பல ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வறண்டு விட்டது.
இதனால் நகராட்சி குடிநீரையே பொதுமக்கள் நம்பி உள்ளனர். சமையல், குளியல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு குடிநீரையே பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் பகிர்மான குழாய்கள் இல்லாத பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான லாரி மூலம் குடிநீர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திருமணம், காதணி, கோயில் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்து கொள்ள நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கருவூலத்தில் ரூ.350ஐ செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டால், நகராட்சி லாரி மூலம் ரூ.8ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் டீசல் விலை உயர்வு, வாகனம் பராமரிப்பு செலவு, பணியாளர்கள் ஊதியம் மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளது என கூறி கடந்த மாதம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இக்கட்டணத்தை ரூ.ஆயிரமாக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தை கூறலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகை யில், கூடுதல் செலவு ஏற்பட்டதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்னமும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. கட்டணம் உயர்வு என பொதுமக்கள் கருதினால் நகராட்சி அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அதன் மூலம் கட்டணம் குறைப்புக்கு வழிவகை செய்யப்படும். என்றார்.