தினமலர் 29.01.2014
பழைய மாநகராட்சி கட்டிடம் இடிக்கும் பணி துவக்கம்
சேலம்: சேலத்தில், புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்படுவதால், பழமையான கட்டிடங்கள் இடிக்கும் பணி, நேற்று துவங்கியது. சேலம் நகராட்சி, 1866ல், துவங்கப்பட்டு, 1979, ஏப்ரல், 1ல், சிறப்பு நிலை நகராட்சியாகவும், 1994, ஜூன், 1ல், மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இங்குள்ள சுகாதாரப்பிரிவு கட்டிடம், 147 ஆண்டுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதன் பின், 1958 மற்றும் 1963ல், அடுத்தடுத்து, ஒரு கட்டிடம் எழுப்பப்பட்டது. நகராட்சி நூற்றாண்டு விழாவின் போது, 1966ல், ராஜாஜி பெயரில் மன்ற கூட்ட அரங்கம் கட்டப்பட்டது. 2003ல், மேயர் அலுவலகம் கட்டப்பட்டது.
எனவே, நிர்வாக வசதிக்கு கட்டிடங்கள் போதுமானதாக இல்லை. ஆதலால், பழமை வாய்ந்த மாநகராட்சி கட்டிடங்களை இடித்து, நவீன வசதிகளுடன், இரு அடுக்குகள் கொண்ட, ஒருங்கிணைந்த கட்டிடம் கட்ட, 7.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. அதற்காக, மாநகராட்சி அலுவலகம், தற்காலிகமாக தொங்கும் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டுமானப்பணியை மேற்கொள்ளும், ஆர்.ஆர். துளசி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம், பழைய மாநகராட்சி கட்டிடங்களை இடிக்கும் பணியை, நேற்று துவங்கியுள்ளது. மூன்று மாதங்களில், கட்டிடங்களை இடித்து, தரைமட்டமாக்கிய பின், பூமிபூஜை போட்டு, புதிய கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.