தினமணி 29.01.2014
அம்பத்தூரில் இறைச்சிக் கடைகள் அகற்றம்
அம்பத்தூரில் தெரு ஓரங்களில் அனுமதியின்றி இயங்கி வந்த இறைச்சி கடைகளை செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மண்டலம்-7 (அம்பத்தூர்) செங்குன்றம் சாலை, புதூர் மார்க்கெட், கொரட்டூர் வடக்கு நிழற்சாலை முதலிய பகுதிகளில் தெருவோரங்களில் பல்வேறு கறிக் கடைகள் இயங்கி வந்தன. அனுமதி மற்றும் உரிமம் இன்றி இயங்கி வந்த அந்தக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜன.28) அகற்றினர்.
மேலும் முத்திரையின்றி விற்பனைக்கு வைக்கப்பட்ட 120 கிலோ எடையுள்ள இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும் சாலையோரம் இறைச்சி கடைகள் நடத்துவதற்காக 21 இடங்களில் போடப்பட்டிருந்த தாற்காலிக பந்தல்களையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.