தினகரன் 30.01.2014
பாதாள சாக்கடைக்கு வரி செலுத்தாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அபராதம் மாநகராட்சி அதிரடி
திருச்சி, : பாதாள சாக்கடைக்கு வரி செலுத்தாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அப ராதம் விதிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் வரி செலுத்தாமல் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கண்டோன்மென்ட் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தனபால் தலைமையில் அலுவலர்கள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பாதாள சாக்கடைக்கு வரி செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வரிகட்டாத வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் யார், யார் பாதாள சாக்கடைக்கு இதுவரை வரி செலுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர்ந்து வரி செலுத்தாத வீடுகள் கண்டறியப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்றனர்.