தினத்தந்தி 15.02.2014
நெல்லை மாநகராட்சியில் நிலுவை வரிபாக்கிகளை வசூல் செய்ய நடவடிக்கை புதிய ஆணையாளர் லட்சுமி பேட்டி
![](http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/14NLNH03.jpg)
“நெல்லை மாநகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்துவரி, குடிநீர் வரி பாக்கிகளை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்“ என புதிய ஆணையாளர் லட்சுமி தெரிவித்தார்.
புதிய ஆணையாளர்
நெல்லை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பு வகித்த மோகன் மறைவுக்கு பிறகு, அந்த பொறுப்புகளை மாநகர பொறியாளர் ஜெய்சேவியர் கவனித்து வந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சிகளின் மண்டல இயக்குனராக பணியாற்றிய லட்சுமி, நெல்லை மாநகராட்சி புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நெல்லை மாநகராட்சி நிதி நிலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், சொத்துவரி மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் வசூல் செய்யவும், சென்னையை போல் நெல்லை மாநகராட்சியையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதாள சாக்கடை திட்டம்
2–ம் கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவு படுத்தப்படும். மக்களுக்கு தேவையான சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு புதிய ஆணையாளர் லட்சுமி கூறினார்.
அவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகும். தூத்துக்குடி மாநகராட்சியில் 2007 முதல் 2009 வரை பணியாற்றினார். அதன்பிறகு திண்டுக்கல் நகரசபை ஆணையாளராக இருந்தார். பின்னர் சென்னை மறைமலை நகர் நகரசபை ஆணையாளராக பணியாற்றினார். அதன்பிறகு செங்கல்பட்டு நகராட்சிகளின் மண்டல இயக்குனராக பதவி வகித்தவர் ஆவார்.
புதிய ஆணையாளராக பதவி ஏற்ற லட்சுமிக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.