தினமணி 6.11.2009
பஸ் நிலையத்துக்கு அண்ணா பெயர்
அம்பாசமுத்திரம், நவ. 5: கல்லிடைக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு அண்ணா பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி மன்றத் தலைவர் க. இசக்கிபாண்டியன் புதன்கிழமை தெரிவித்தார்.
கல்லிடைக்குறிச்சி புதிய பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பஸ் நிலையத்துக்கு அண்ணா பெயர் சூட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ். ராமசுப்பு எம்.பி. நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிதி போக பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 3 லட்சம் சேர்த்து ரூ. 8 லட்சத்தில் குடிநீர்த் தொட்டிக்கு பைப் லைன் அமைக்கப்படுகிறது.
மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பா. வேல்துரை எம்எல்ஏ ரூ. 8.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அந்நிதியில் இருந்து சிமெண்ட் தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஸ் நிலையத்தின் முகப்பில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியில் குடிநீர்க் கட்டணம் வசூலிக்கும் பணி அதிகரித்து வருவதால், குடிநீர்க் கட்டணத்தை கணினி மூலம் வசூலிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் பேரூராட்சித் தலைவர் க. இசக்கிபாண்டியன்.