தினமணி 11.11.2009
ஒசூர் புதிய பஸ் நிலையக் கடைகளுக்கு ஏலம் நடத்தி நகராட்சி உறுதி செய்யலாம்
ஒசூர், நவ. 10: ஒசூர் புதிய பஸ் நிலையக் கடைகளுக்கு ஏலம் நடத்தி, இதனை நகராட்சி உறுதி செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
ஒசூர் புதிய நவீன பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 76 கடைகள் மற்றும் 2 உணவு விடுதிகளுக்கான முன் ஏலம் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதற்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பழைய பஸ் நிலையக் கடை வியாபாரிகள் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கில் (வழக்கு எண் டபிள்யூ.பி.எண் 21351/2009) ஏலம் நடைபெற்ற பின் உறுதி செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவை பெற்றிருந்தனர்.
இவ்வழக்கை நவ.5-ல் விசாரணைக்கு வரப்பெற்றபோது, வழக்கினை தள்ளுபடி செய்து நகராட்சிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்.முரளி ஆஜராகி வாதாடினார். இன்று ஏலம் எனவே, ஒசூர் புதிய நவீன பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் உணவு விடுதிகளுக்கான நவ.11-ல் நடைபெறும் மறுமுன் ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.