தினமணி 14.11.2009
மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் ஆணையர் ஆய்வு
மதுரை, நவ. 13: மதுரை மாநகராட்சி லேடி வெல்லிங்டன் மற்றும் செல்லூர் மகப்பேறு மருத்துவமனைகளில் ஆணையர் எஸ். செபாஸ்டின் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மருத்துவர்கள், செவிலியர்கள் வருகைப் பதிவேடுகளைப் பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்த தாய்மார்களிடம் சிகிச்சை மற்றும் ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை சரியாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு, தேவையான உபகரணங்கள் உள்ளனவா? என்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செல்லூர் பகுதிகளில், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்காக பயனாளிகளின் புகைப்படம் எடுக்கும் பணியைப் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, நகர் நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், உதவி நகர் நல அலுவலர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் உடனிருந்தனர்.