தினமணி 14.11.2009
குமரி கடற்கரை தனியார் பூங்காவில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி, நவ. 13: கன்னியாகுமரி கடற்கரையில் தனியார் பூங்கா அமைந்துள்ள பகுதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கடலோர மண்டல மேலாண்மை திட்டக்குழுவினர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபம் அருகே பேரூராட்சி அனுமதியுடன் ரூ. 15 கோடி செலவில் தனியார் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இப்பூங்கா அமைக்க பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பூங்கா அமைக்கும் பணியை நிறுத்துமாறு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜோதிநிர்மலா 9.3.2008 அன்று உத்தரவிட்டார். இதையடுத்து, பூங்கா அமைக்கும் பணி திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.
பூங்கா அமைப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் நீதிமன்றம் ஓர் உத்தரவினை பிறப்பித்தது. இந்த உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கடலோர மண்டல மேலாண்மை திட்டக்குழுவினர் வெள்ளிக்கிழமை பூங்காவை பார்வையிட்டுஆய்வு செய்தனர். இக்குழுவில் மாவட்ட வன அலுவலர் சுந்தர்ராஜு, நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் த.மோகன், நெல்லை நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் பாபு, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர்கள் சுயம்பு தங்கராணி, ஆல்பின், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பாலசந்திரன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ராசையா உள்ளிட்டோர் சென்றனர்.