தினமணி 17.11.2009
வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டினால் அபராதம்: ஆணையர்
மதுரை, நவ. 16: வைகை ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் எச்சரித்துள்ளார்.
வைகை ஆற்றின் குறுக்கே உள்ள கல்பாலம் மற்றும் ஆரப்பாளையம் தரைவழிப் பாலங்களை மேயர் கோ. தேன்மொழி, ஆணையர் எஸ். செபாஸ்டின் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வுசெய்தனர்.
கோச்சடையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
பின்னர், ஆணையர் கூறியதாவது:
வைகை ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகள் மற்றும் குப்பைகள் பொதுப்பணித் துறையினர் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
வைகை ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் ஆற்றில் குப்பைகளைக் கொட்டியும், மாடுகளைக் கட்டியும் அசுத்தம் செய்துவருகின்றனர். இதனால் வைகை ஆறு மாசுபடுகிறது. எனவே, வைகை ஆறு மாசுபடாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இனிவரும் காலங்களில் வைகை ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவோர் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையர் எச்சரித்தார்.
முன்னதாக, 66-வது வார்டு பைகாரா பகுதியில் காலனி வீடுகள் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகளை ஆய்வுசெய்து, சாலையில் தேங்கியுள்ள தண்ணீரையும், பழுதடைந்துள்ள மின்கம்பங்களையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, துணை மேயர் பி.எம். மன்னன், மண்டலத் தலைவர் என். நாகராஜன், கவுன்சிலர் மா. கணேசன், உதவி ஆணையர் (மேற்கு) ரவீந்திரன், உதவிச் செயற்பொறியாளர் எம்.ஆர். சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.