தினமணி 18.11.2009
திட்டப் பணிகளை மார்ச்óசுக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
திருநெல்வேலி, நவ. 17: திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசின் திட்டப் பணிகளை வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என, அதிகாரிகளை இம் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரான தொல்பொருள் முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் டி.எஸ். ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.
இம் மாவட்டத்தில் நடைபெறும் அரசுத் துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் மு. ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஸ்ரீதர் கேட்டறிந்தார்.
பின்னர் அப் பணிகளை நிகழ் நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ. ரமணசரஸ்வதி, திட்ட அலுவலர் அர. சங்கர், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வீரராகவராவ், நகராட்சிகளின் மண்டல இயக்குநர் த. மோகன், மாவட்ட சமூக நல அலுவலர் வீ. உமாதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அ. தேவிகுமாரி, மகளிர் திட்ட அலுவலர் ஜி. முத்துமீனாள், வேளாண் இணை இயக்குநர் எஸ். வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும், நான்குனேரியில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியையும் ஸ்ரீதர் பார்வையிட்டார். அவருடன் ஆட்சியர் ஜெயராமன் சென்றார்.