தினமணி 21.11.2009
மயான உதவியாளர்களுக்கு பணி மாறுதல்: மேயர் தகவல்
சென்னை, நவ.20: சென்னையிலுள்ள மயான பூமிகள் நவீன மயமாக்கப்பட்டு வருவதால், அங்கு பணிபுரியும் மயான உதவியாளர்கள் பணி மாறுதல்கள் பெற்றுச் செல்லலாம் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மாநகராட்சி மயானங்களில் பணிபுரியும் மயான உதவியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாநகராட்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மேயர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
மயான பூமியில் தவறுகள் நடப்பதை தவிர்ப்பதற்காக, சடலங்கள் எரிப்பதையும், புதைப்பதையும் சென்னை மாநகராட்சி இலவசமாக்கியது. ஆனால் தொடர்ந்து தவறுகள் நடைபெற்று வருகின்றன.
மயான பூமிக்கு துக்கத்துடன் வருபவர்களிடம் பணம் வசூல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். இதற்காக மயான உதவியாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர மாநகராட்சி தயாராக உள்ளது.
ஏற்கெனவே, மயான உதவியாளர்கள் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும், மாநகராட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
தேவைப்பட்டால், மயான உதவியாளர்களுக்கு ஓய்வு அறை கட்டித்தர மாநகராட்சி தயாராக உள்ளது. மேலும், எரிவாயு தகனமேடை, மின்சாரத் தகன மேடை என மயான பூமிகள் இப்போது நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.
எனவே, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள மற்ற பணியிடங்களுக்கு, பணி மாறுதல்களை மயான உதவியாளர்கள் பெற்றுச் செல்லலாம்.
மயான பூமியில் முறைகேடுகள் நடைபெறுவதையோ, மாநகராட்சி ஊழியர் அல்லாதவர்கள் ஆதிக்கம் செலுத்துவதையோ அனுமதிக்க முடியாது. பணி முடிந்தவுடன், ஊழியர்கள் மயானத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்றார்.