தினமணி 27.11.2009
சிங்கப்பூர் அரசு அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
சிங்கப்பூரில் உள்ள நதிகள் மேம்பாட்டு பணிகளை வியாழக்கிழமை பார்வையிடுகிறார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை, நவ. 26: ஆறுகளை தூய்மைப்படுத்துவது குறித்து சிங்கப்பூர் அரசு அதிகாரிகளுடன் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்நாட்டின் பொதுநல வாரியத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆறுகளை தூய்மைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
1977-ம் ஆண்டுக்கு முன்பு முற்றிலும் மாசுபட்டிருந்த சிங்கப்பூர் ஆற்றை 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் அரசு தூய்மைப்படுத்தியது. அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினார்கள்.
சுத்தப்படுத்திய பிறகு ஆற்றின் கரையோரங்களில் வணிக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆற்றை அழகுபடுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
சிங்கப்பூர் ஆற்றுக்குள் கடல் நீர் புகாமல் இருப்பதற்காக கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையை ஸ்டாலின் பார்வையிட்டார். படகில் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று ஆற்றின் ஓரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும் ஸ்டாலின் பார்வையிட்டார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு துணை முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினார்.
சிங்கப்பூர் ஆறு தூய்மைப்படுத்தப்பட்டது போல சென்னையில் ஓடும் கூவம் நதியை சுத்தப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காகவே ஸ்டாலின் சிங்கப்பூர் அரசு அதிகாரிகளிடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.