தினமணி 08.12.2009
அரக்கோணம் நகராட்சியில் நிர்வாக இயக்குநர் ஆய்வு
அரக்கோணம், டிச.7: அரக்கோணம் நகராட்சியில், வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் சனிக்கிழமை ஆய்வு நடத்தினார்.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வில் வருவாய்ப் பிரிவு, கணக்குப் பிரிவு, பொதுப் பிரிவு, நகரமைப்புப் பிரிவு, பொறியியல் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் தனித்தனியே ஆய்வு நடத்தினார்.
பின்னர் காலிவாரிகண்டிகை நகராட்சி பள்ளி கட்டடத்தை பார்வையிட்டு அங்கு மாணவ மாணவிகளுக்கு மேலும் வசதிகள் செய்துதர உத்தரவிட்டார். அப்பகுதியில் எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்டு வரும் மயான சுற்றுச்சுவர் கட்டும் பணி,கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு அங்கிருந்த பழைய கழிப்பிட அறையை மாற்றி புதிதாகக் கட்ட உத்தரவிட்டார். பகுதி-2 திட்டத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்கும் தளத்தை உயர்த்திக் கட்டவும், பேருந்து நிலைய சிமென்ட் சாலையை பழுதுபார்க்கவும் ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும் என்றார்.அரக்கோணம் நகராட்சி ஆணையர் விமலா, பொறியாளர் ஜார்ஜ், நகரமைப்பு அலுவலர் தயாநிதி, சுகாதார அலுவலர் மேகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.