தினமணி 19.12.2009
மாநகராட்சி, நகராட்சி அலுவலர்களை அரசு அலுவலர்களாக அறிவிக்க கோரிக்கை
தூத்துக்குடி, டிச. 18: மாநகராட்சி, நகராட்சி அலுவலர்களை, அரசு அலுவலர்களாக அறிவிக்க வேண்டும் என, தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம், மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் எம். சுடலைமுத்து தலைமை வகித்தார். செயலர் எம். பெரியசாமி, பொருளாளர் ஜி. ஸ்டாலின் பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச்செயலர் ஆர். சீத்தாராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நகராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்கள் என 1989-ல் முதல்வர் மு. கருணாநிதி அறிவிப்பு செய்தார். பின்னர், 2005-ல் அந்த உரிமை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்களை அரசு அலுவலர்கள் என முதல்வர் உத்தரவிட வேண்டும்.
மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 49 சதவிகித செலவின நிபந்தனையை தளர்வு செய்து உத்தரவிட வேண்டும்.
மாநகராட்சி கண்காணிப்பாளர் களுக்கு அரசுத்துறை கண்காணிப்பாளர் கள் போன்று அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
தூத்துக்குடி நகராட்சி 5.8.2008 முதல் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டுள்ளதால் மாநகராட்சி அளவுகோல்படி பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்க ஆணை வழங்க வேண்டும்.
மாநகராட்சியில் பணிபுரியும் சீருடை பெற தகுதி பெற்ற பணியாளர்களுக்கு அரசு துறைகளில் வழங்குவது போல் ஆண்டுக்கு 3 செட் சீருடைகள் வழங்க வேண்டும்.
சுகாதார பார்வையாளர் பணியிடம் 2 காலியாக உள்ளதை கருத்தில் கொண்டு பணி விதியினை தளர்வு செய்து நகர சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஆணை வழங்க வேண்டும்.
பொறியியல் பிரிவில் புதிய திட்டப் பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களுடன் கூடிய தனிப்
பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பிரதிநிதி எஸ். சந்தனராஜ், தூத்துக்குடி மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்க தலைவர் பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\