தினமணி 08.01.2010
பெரம்பூர் மேம்பாலப் பணி: தலைமைச் செயலாளர் ஆய்வு
சென்னை, ஜன. 7: சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரம்பூர் மேம்பாலப் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூரில் ரூ. 53.70 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் தெற்கு பகுதியான ஜமாலியா பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணியும், மேம்பாலத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரூ. 69 லட்சம் செலவில் பூங்காக்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் உடன் இருந்தனர்.