தினமலர் 03.02.2010
திண்டுக்கல் நகராட்சி பொதுநிதியில் வேலை செய்யும் நடைமுறை மாற்றம்
திண்டுக்கல்: கான்ட்ராக்டர்களின் அதிருப்தியால்,திண்டுக்கல் நகராட்சி பொதுநிதியில் வேலை செய்யும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நகராட்சி பொதுநிதியில் வேலை செய்ய டெண்டர் கோரினால் நகராட்சி கான்ட்ராக்டர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.யாரும் டெண்டர் எடுக்க முன்வருவதில்லை. நகராட்சியின் நிதி இருப்பு மிகவும் மோசமாக உள்ளதால், செய்து முடித்த வேலைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு கூட ஆகி விடும். அதுவரை வேலை செய்து விட்டு காத்திருக்க முடியாது என்பதால் கான்ட்ராக்டர்கள் பணிகளை எடுத்து செய்ய வருவதில்லை. இதனால் பல பணிகள் முடங்கியது.இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. எந்த வேலைக்கு எவ்வளவு நிதி தேவையோ, அந்த அளவு நிதி இருப்பு வைத்துக் கொண்டு டெண்டர் விடுகிறது. பணிகள் செய்த உடனே நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனால் மீண்டும் கான்ட்ராக்டர்கள் ஆர்வத்துடன் பொதுநிதி பணிகளை டெண்டர் எடுத்து செய்ய தொடங்கி உள்ளனர்.