தினமணி 03.02.2010
இணையதளம் மூலம் கட்டட வரைபடத்திற்கு அனுமதி: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை, பிப்.2:கட்டட வரைபடத்தை இணையதளம் மூலமாக சரிபார்த்து அனுமதி வழங்கும் புதிய முறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பொதுமக்களின் கால விரயம் தவிர்க்கப்படுவதுடன் அவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களின் கட்டட வரைபடம் முறையாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த கட்டட வரைபட அனுமதியை இணையதளம் மூலம் பெற விரும்புவோர் சென்னை மாநகராட்சியின் இணையதளமான www.chennaicorporation.gov.in என்ற முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டமானது கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது சென்னை மாநகராட்சியின் அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 1550 கட்டட வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியானது வேலை நாட்களில் எட்டு மணி நேரத்திற்குள்ளாக சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகின்றது.