Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பல்லவன் நகரில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் பூங்கா : கலெக்டர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர் 04.02.2010

பல்லவன் நகரில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் பூங்கா : கலெக்டர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் : அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதியை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அண்ணாதுரை நூற் றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், ஒரு கோடியே இரண்டு லட்ச ரூபாய் செவிலிமேடு பேரூராட்சியில் பல்வேறு பணிகள் செய்ய ஒதுக்கப்பட்டது. இந்நிதியில் பல்லவன் நகரில் பூங்கா அமைக்க, 25 லட்ச ரூபாய், கன்னிகாபுரத்தில் சிமென்ட் சாலை அமைக்க நான்கு லட்ச ரூபாய், காமராஜர் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க ஐந்து லட்ச ரூபாய். இரண்டு இடங்களில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க எட்டு லட்ச ரூபாய், திருப் பருத்திக்குன்றம் சாலையில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்க 60 லட்ச ரூபாய் ஒதுக்கப் பட்டது. செவிலிமேடு பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டுக்குட்பட்ட கன்னிகாபுரம் குடிசைப் பகுதியில் 225 மீட்டர் நீளத்திற்கு நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கப் பட்டுள்ளது.

இப்பணியையும், பல்லவன் நகரில் 25 லட்ச ரூபாய் பூங்கா அமைய உள்ள இடத்தையும் கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செவிலிமேடு பேரூராட்சி தலைவர் ஏழுமலை, துணைத் தலைவர் விஸ்வநாதன், செயல் அலுவலர் ரவிக்குமார், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் முரளிதரன் ஆகியோர் உட னிருந்தனர். உயர் கோபுர மின் விளக்கு, பல்லவன் நகர் சந்திப்பு மற்றும் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் அருகில் அமைய உள்ளது. கலெக்டர் அலுவலகம் அருகில் அமைய உள்ள விளக்கை எல்லப்பா நகர் இரண்டாவது தெரு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சந்திப்பு பகுதியில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Thursday, 04 February 2010 06:25