தினமலர் 18.02.2010
ரூ.2.25 கோடியில் குடிசை மேம்பாட்டு திட்டம் மத்திய நகர்ப்புற வளர்ச்சி பொறியாளர் ஆய்வு
பள்ளிபாளையம்: ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் 2.25 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும், ஒருங்கிணைந்த வீடுகள் மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டப் பணிகளை மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி துறை தலைமை பொறியாளர் கேப்டன் சுப்ரதா முகோபாத்யாயா ஆய்வு செய்தார்.
பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் ஒருங்கிணைந்த வீடுகள் மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.79 கோடி ரூபாய் மதிப்பில் 149 வீடுகள் கட்டுதல், 46.59 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால், சாலை மற்றும் தெரு விளக்குகள் அமைத்தல் என மொத்தம் 2 கோடியே 25 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாதயத்துக்கு உட்பட்ட கிழக்கு தொட்டிபாளையம், காந்திநகர், வெங்கடேசபுரம், கரட்டாங்காடு, சின்னாக்கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசின் நகர்புற வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் கேப்டன் சுப்ரதா முகபாத்யாயே நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஒருங்கிணைந்த வீடுகள் மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருந்தன. மேலும், 56 வீடுகள் முடிக்கும் நிலையிலும், 87 வீடுகள் பாதி முடிந்தும் காணப்பட்டது. அபிவிருத்தி பணிகளான வடிகால், சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவுற்றும் இருந்தது. மத்திய அரசின் மானியத்துடன் நடக்கும் இத்திட்டம் ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் சிறப்பாக நடப்பது குறித்து நிர்வாகத்துக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
ஆய்வின் போது பஞ்சாயத்து சேர்மன் யுவராஜ், சேலம் மண்டல டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் ஞானசேகரன், மாவட்ட உதவி செயலாளர் புண்ணியமூர்த்தி, செயல் அலுவலர் கோவிந்தராஜூ, கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.