தினமலர் 19.02.2010
நகராட்சி, மாநகராட்சி சுகாதாரசெவிலியர்களுக்கு சீருடைப்படி உயர்வு
திருநெல்வேலி:நகராட்சி, மாநகராட்சி சுகாதார செவிலியர்களுக்கு சீருடை படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின கீழ் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் நகராட்சி மருத்துவ பணி விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டனர். மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் சீருடை படி பொருந்தும் என உத்தரவிடப்பட்டது.இந்த சீருடைப் படி மாநகராட்சி, நகராட்சி நிதியில் இருந்து வழங்கப்படுவதால் அரசுக்கு செலவினம் இல்லை. எனவே, மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் மகப்பேறு உதவியாளர், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், ஏ.என்.எம் பணியாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு சீருடை படியாக 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குனர் அரசை கேட்டு கொண்டுள்ளார்.இந்த செயல் குறிப்பை அரசு கவனமாக பரிசீலித்து இதனை ஏற்று நகராட்சி, மாநகராட்சிகளில் பொது சுகாதார துறையில் பணிபுரியும் மகப்பேறு உதவியாளர்கள், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், ஏ.என்.எம் ஆகிய பணியாளர்களுக்கு சீருடைப் படியாக ஆண்டு ஒன்றுக்கு 500 ரூபாய் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு பாராட்டு:இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், அரசு செயலாளர் நிரஞ்சன் மார்டி மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று தமிழ்நாடு உள்ளாட்சி நகர சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவி விஜயலட்சுமி தெரிவித்தார்.