தினமணி 18.03.2010
மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடித்தால் இணைப்பு துண்டிக்கப்படும்
சிவகாசி, மார்ச் 17: சிவகாசி நகராட்சிப் பகுதியில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் பிடித்தால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என, நகர்மன்றத் துணைத் தலைவகர் ஜி. அசோகன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, அவர் புதன்கிழமை கூறியதாவது:
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வெம்பக்கோட்டை அணைக்கட்டில் தற்போது 1.80 மீட்டர் தண்ணீரே உள்ளது. அதிலிருந்து தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.
மின்தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் தற்போது 4 நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பலர் குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் பிடிப்பதாகப் புகார்கள் எழுகின்றன.
குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். இதனைக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் இணைப்பு வழங்கப்படமாட்டாது என்றார் அவர்.