தினமலர் 25.03.2010
பேரூராட்சிகளில் இயக்குனர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு
கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து பேரூராட்சிகளில், பேரூராட்சிகளின் இயக்குனர் அலுவலக அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. ஆண்டிபட்டி, மார்க்கையன்கோட்டை, அனுமந்தன்பட்டி, தேவாரம் மற்றும் ஓடைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில், பேரூராட்சிகளின் இயக்குனர் அலுவலக அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. பேரூராட்சிகளில் நிதி நிலைமை, வருவாய், செலவுகள், தெரு விளக்குகள் பராமரிப்பு, பொதுச் சுகாதாரம், மக்கள் தொகை, மக்களின் வாழ்க்கைத் தரம், மேம்பாடு செய்ய வேண்டிய விஷயங்கள் போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் பொதுமக்களிடம் நேரடியாக தேவையான வசதிகள், நிவர்த்தி செய்யப்படாத குறைகள் போன்ற விபரங்களை கேடடறிந்தனர்.
பேரூராட்சிகளின் செயல்அலுவலர்கள் கூறுகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சில பேரூராட்சிகளை தேர்வு செய்து தன்னிறைவு பெற்ற பேரூராட்சிகளாகவும், அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் தன்னிறைவு பெற்றிருக்குமாறு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. குழுவின் அறிக்கை அடிப்படையில் அரசு ஒவ்வொரு பேரூராட்சிக்கும் நிதி ஒதுக்கீடுகள் செய்யும். தேனி மாவட்டத்தில் ஐந்து பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றனர்.