தினமணி 27.03.2010
தாந்தோன்றிமலை நகராட்சிக்கு ரூ. 10 லட்சத்தில் ஜெனரேட்டர்
கரூர், மார்ச் 26: தாந்தோன்றிமலை நகராட்சியில் ரூ. 10 லட்சத்தில் புதிய ஜெனரேட்டர் வெள்ளிக்கிழமை அர்ப்பணிக்கப்பட்டது.
தாந்தோன்றிமலை நகராட்சியின் குடிநீர்த் தேவைக்காக கட்டளை காவிரியாற்றில் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அங்கிருந்து குழாய் வழியாக மூலகாட்டனூர் சென்று, அங்குள்ள நீர் உந்து நிலையம் மூலம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நீர் உந்து நிலையத்தில் மின் மோட்டார்கள் செயல்பட்டு வருகின்றன. அடிக்கடி தடைபடும் மின்சாரத்தால் சீரான குடிநீர் விநியோகம் பெற முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, மூலக்காட்டனூர் நீர் உந்து நிலையத்தில் நகராட்சி மூலமாக ரூ. 0 ட்சத்தில் 100 கேவிஏ திறன் கொண்ட ஜெனரேட்டர் பொருத்தும் பணி அண்மையில் முடிவுற்றது. இதை நகராட்சிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஜெ. ரேவதி தலைமை வகித்து இயக்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மூலக்காட்டனூரில் பகுதி 2 திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம், பொது நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் சேர்த்து இந்த ஜெனரேட்டர் வாங்கப்பட்டுள்ளது. இதனால், மின்சாரம் தடைபடும் நேரத்திலும் இங்கிருந்து தண்ணீர் கிடைக்கும். இதனால், நகராட்சிப் பகுதியில் தற்போது 10 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் தண்ணீர், 8 நாள்களுக்கு ஒரு முறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போல, கட்டளைத் தலைமை நீரேற்று நிலையத்தில் வெற்றிடம் நிரப்பும் நிதி ரூ. 20 லட்சம், பொது நிதி ரூ. 5 லட்சம் மூலமாக புதிய ஜெனரேட்டர் பொருத்த மார்ச் 15-ல் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விரைவில் பணிகள் முடிந்து வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படும் என்றார் அவர். கவுன்சிலர்கள் ஆர். செல்வராஜ், எஸ். மோகன்ராஜ், பி. ராஜு, என். மகாலிங்கம், கோடங்கிப்பட்டி பழனிச்சாமி, மே. செல்லபாப்பா, இ. கண்ணகி, பி.எம். ரவி, சி. மணியம்மை, நகராட்சிப் பொறியாளர் பாக்கியலட்சுமி, சுகாதார ஆய்வாளர் த. சதீஷ்சாய்நாத், எழுத்தர் உதயசூரியன், அதிமுக நிர்வாகிகள் ஜெயராஜ், எஸ். சுந்தர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.