தினமணி 05.05.2010
பொது சுகாதாரம், குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது
சேலம், ஏப். 4: சேலம் மாநகராட்சியில் பொது சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று சேலம் மாநகராட்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
÷இந்த சங்கத்தின் கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைவர் க.பாலு கண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சிவசாமி, நாகரத்தினம், செயலர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
÷தமிழ்நாடு நகராட்சி அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.குழந்தைவேலு, நகராட்சி அலுவலர் சங்க சேலம் மண்டலத் தலைவர் கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
÷மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர் என்று அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், சேலம் மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். பிற துறை பணிகளையும், பிற துறை அலுவலர்களையும் மாநகராட்சியில் திணிக்கக் கூடாது.
÷காலமுறைக்கேற்ப புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும், புதிதாக பணியில் சேர்ந்த அலுவலர்களுக்கு ஏற்கெனவே உள்ள ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொது சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் போன்ற பிரிவுகளின் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
÷மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் காசாளராக பணியாற்றுவோர் வங்கிகளுக்கு பணம் செலுத்தச் செல்லும்போதும் மாநகராட்சி வாகனத்தை வழங்கவும், பாதுகாப்பு வழங்கவும் வழி செய்ய வேண்டும். மாநகராட்சி ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.