தினமணி 06.04.2010
மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை
போடி, ஏப். 5: போடி நகராட்சிப் பகுதியில் மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
போடி நகராட்சியில் 33 வார்டுகளில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் 10 ஆயிரத்து 300க்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே போடி நகராட்சியில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. டி.வி.கே.கே.நகர், சுப்புராஜ் நகர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அழுத்தம் குறைவு காரணமாக குடிநீர் சரியாக விநியோகிக்க முடியாத நிலை இருந்தது.
இதனை தவிர்க்க போடி நீதிமன்ற வளாகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் புதிய மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இதில் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்டு இப்பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கி உள்ளது.
நகராட்சியில் ஒரு நபருக்கு தினமும் 95 லிட்டர் தண்ணீர் வீதம் 77 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காலையும், மாலையும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும் சில பகுதிகளில் தண்ணீர் விநியோகம் சீராக இல்லை என புகார்கள் வருகின்றன. இதுகுறித்து விசாரித்ததில் பல இடங்களில் குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதாக தெரிய வருகிறது.
போடி பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை தற்போது மின் தடை செய்யப்படுகிறது. இந்த நேரங்களில் தண்ணீர் விநியோகம் சீராக உள்ளது.
மின் மோட்டார் மூலம் தண்ணீர் பிடிப்பதால்தான் தண்ணீர் சீராக கிடைப்பதில்லை. எனவே, மின் மோட்டார் வைத்து குடிநீரை எடுப்பவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதோடு, மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.