தினமணி 07.04.2010
கட்டட வரைபட அனுமதிக்கு எளிய முறை
புதுச்சேரி, ஏப். 6: கட்டட வரைபட அனுமதி வழங்க இனிமேல் எளிமையான முறை பின்பற்றப்படும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் கூறினார்.
÷சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:
÷கட்டட வரைபட அனுமதி வழங்க நகர அமைப்புக் குழுமங்களால் பின்பற்றப்படும் முறை எளிமையாக்கப்படும். அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவில் அமைந்துள்ள மனைகளில் இரண்டு அடுக்கு வீடு கட்ட ஒரு வாரத்துக்குள் அனுமதி வழங்கப்படும்.
அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இது குறித்து அரசு ஆணை 19.03.2010 அன்று ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
÷புதுச்சேரி கட்டட விதிமுறைகள் மற்றும் மண்டல கட்டுப்பாடுகள் 1972 விதிமுறை, கட்டட அளவுகோல் அதிகப்படுத்தி திருத்தம் செய்து விரைவில் அறிவிக்கை செய்யப்படும்.
÷புதுவை தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள கனரக வாகன நிறுத்தம் பொது-தனியார் கூட்டு முறையில் இயக்கப்படும். புதுச்சேரி அரசு நலத்திட்டத்தின் மூலம் வீடு கட்ட மானியம் பெறும் வீடுகளுக்கு நகர அமைப்புக் குழுமத்தின் கட்டட அனுமதி இனி வற்புறுத்தபட மாட்டாது.
÷தேசிய நெடுங்சாலை 45-ஏ-ல் இந்திரா காந்தி சதுக்கம் முதல் வில்லியனூர் வரை பஸ் நிறுத்தங்கள் கட்டப்படும். நில உபயோக மாற்றம் செய்வதற்கு தற்போதுள்ள நடைமுறையை எளிமைப்படுத்துதல், புதிய மனைப்பிரிவுகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மனைகள் வரையறை செய்தல் போன்ற அம்சங்களையும் உள்ளடக்கி புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புச் சட்டம் 1969 திருத்தம் செய்யப்படும்.
÷வரும் ஆண்டில் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளின் வளர்ச்சித் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்றார் அமைச்சர் நமச்சிவாயம்.