தினமணி 07.04.2010
மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் நடவடிக்கை
மதுரை, ஏப். 6: மதுரை மாநகராட்சியில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநகராட்சி வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மேயர் கோ.தேன்மொழி தலைமை வகித்தார். ஆணையர் எஸ்.செபாஸ்டின் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் குடிநீர், பாதாள சாக்கடை, தெரு விளக்கு, சாலை ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களிடம்இருந்து 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க ஆணையர் எஸ்.செபாஸ்டின் உத்தரவிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. குறிப்பாக குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெறப் பணியாளர்களுக்கும், தர முத்திரை இல்லாமல் தண்ணீர் பாக்கெட்டுகள் கடைகளில் விற்கப்பட்டால் பறிமுதல் செய்வதற்கு சுகாதார ஆய்வாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடு, கடைகளில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக கோரிப்பாளையம், ஜம்புரோபுரம் மார்கெட் புதிய கட்டடம், கோரிப்பாளையம் மாநகராட்சிப் பள்ளிக் கட்டடம் ஆகிய கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டார்.
பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது எனப் பொதுமக்கள் புகார் செய்தனர். அதை சரிசெய்ய பொறியாளர்களுக்கு மேயர் மற்றும் ஆணையர் உத்தரவிட்டனர்.
குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் கே.இசக்கிமுத்து, துணை ஆணையர் கற்பகராஜ், தலைமைப் பொறியாளர் சக்திவேல், கவுன்சிலர் ஜெகநாதன், உமா, உதவி ஆணையர் இரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.