தினமணி 16.04.2010
அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
சேலம், ஏப். 15: சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாக அகற்றினர்.
சேலம் மாநகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுகளுக்கு மாதத்துக்கு இரண்டு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி, ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
÷சேலத்தில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள், வணிக நோக்கத்துக்காக குடிநீரைத் திருடுபவர்களால்தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கருதினர். இதையடுத்து அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க ஆணையர் டாக்டர் பழனிச்சாமி உத்தரவிட்டார்.
÷இதையடுத்து சூரமங்கலம் மண்டலம் 1-வது வார்டுக்குட்பட்ட காமநாயக்கன்பட்டி பகுதியில் உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் பெருமாள்கோயில் தெரு, பள்ளிக் கூடத் தெரு பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் 12 வீடுகளில் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
÷இதையடுத்து அந்த இணைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மாநகரம் முழுவதும் இதுபோல் அனுமதி பெறாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.