தினமணி 17.04.2010
விதிமீறல் கட்டடத்துக்கு சீல் வைப்பு: சி.எம்.டி.ஏ. நடவடிக்கை
சென்னை, ஏப். 16: சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர்.
சென்னை பெருநகர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறியும், முறையான அனுமதியின்றியும் கட்டப்படும் கட்டடங்கள் மீது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன்படி பல்வேறு கட்டடங்களை ஆய்வு செய்து நோட்டீஸ்களை வழங்கி தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தியாகராய நகர் பத்மநாபா தெருவில் கீழ்த்தளம் உள்ளிட்ட 4 அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடம் கட்ட கிருஷ்ணன் என்பவர் அனுமதி வாங்கி இருந்தாராம். ஆனால், அனுமதிக்கப்பட்ட விதிகளை மீறி, 5 மாடிகளைக் கொண்ட வணிக வளாகமாக அந்தக் கட்டடம் கட்டப்பட்டுவது தெரிய வந்துள்ளது.
தரைபரப்புக் குறியீடு, இடைவெளி விடாமல் கட்டியது, அடுக்குமாடி விதிகள் ஆகியவற்றை இந்த கட்டடத்தின் உரிமையாளர் மீறியுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, வீதிமீறல்கள் குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், விதிமீறலை சரி செய்ய வேண்டும் என்றும் கட்டடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டும் கட்டடத்தின் உரிமையாளர் விதிமீறல்கள் குறித்து உரிய விளக்கம் அளிக்காததால், அந்த கட்டட வளாகத்துக்கு சீல் வைக்க சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டார்.
இதன்படி, அக் கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலையில் சீல் வைத்தனர். விதிமீறலை சரி செய்து புதிதாக ஒப்புதல் பெறும் வரை இந்த கட்டடத்தை எந்த விதத்திலும் பயன்படுத்துவது தடை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.