தினமலர் 26.04.2010
கழிவு கொட்டினால் 'ஸ்பாட் பைன்' : மாநகராட்சி அதிரடி முடிவு
திருப்பூர் : பொது இடங்களில் பனியன் தொழிற் சாலை கழிவுகளை கொட்டினால், அபராதம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பனியன் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. இரவு நேரங்களில் நொய்யல் ஆறு, ஜம்மனை பள்ளம் உள்ளிட்ட நீர்வழித்தடங்களிலும், சாலை ஓரங்களிலும் முறைகேடாக பனியன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் நொய்யலில் முறைகேடாக பனியன் கழிவுகளைக் கொட்டிய மினி ஆட்டோவை மேயர் கைப்பற்றி, அபராதம் விதித்தார்.வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தினரும் சில வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இருந்த போதும் முறைகேடாக கழிவுகள் கொட்டப் படுவது தொடர்கதையாகி உள்ளது. இதை யடுத்து, கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபராதம் விதிக்க மாநக ராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து பனியன் தொழிற்சாலை கழிவுகள், வர்த்தக நோக்கில் பயன் படுத்தப்படும் கட்டடங்கள், நிறுவன உபயோகிப்பாளர்களால் ஏற்படும் கழிவு கள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்களில் ஏற்படும் கழிவுகள், பொது சாலையில் கொட்டப்படும் கழிவுகளை மாநகராட்சி லாரி மூலம் அகற்ற ஒரு டிரிப்புக்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பனியன் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை பொது சுகாதாரம் பாதிக்கப்படும் வகையில் கொட்டக்கூடாது. மீறினால், சம்பந்தப் பட்ட நிறுவன உரிமையாளருக்கு சம்பவம் நடந்த இடத்திலேயே அபாரதம் விதிக்கப்படும். முதல் முறையாக இருப்பின் 1,000 ரூபாய்; இரண்டாவது முறையாக இருந்தால் 3,000 ரூபாய் வசூலிக்கப்படும். தொடர்ந்து நிகழ்ந்தால், நிறுவனத்துக்கு 'சீல்' வைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த தீர்மானம், வரும் 29ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் மன்ற ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது.