தினமலர் 26.04.2010
செந்தூர் பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட்டில் புதிதாக கட் டப்பட்டுள்ள கடைகளில் மாத வாடகை ரூ.17 ஆயிரத்தை தாண்டியது. புதியதாக கட்டப்பட்டுள்ள திருச்செந்தூர் பகத்சிங் பஸ் ஸ்டாண்டிற்குள் 29 கடைகள் மற்றும் கழிப்பறை, இரு சக்கர வாகன நிறுத்தம், சாமான்கள் பாதுகாப்பறை மற்றும் இரண்டு உணவு விடுதிகள் என மொத்தம் 34 வணிக நிறுவனத்திற்கான பொது ஏலம் டவுன் பஞ்., அலுவலகத்தில் வைத்து நடந்தது. நிர்வாக அதிகாரி வீரப்பன் முன்னிலையில் நடந்த ஏலத்தில் 13 கடைகளுக்கு டெபாசிட் தொகையாக ரூபாய் 60 ஆயிரமும், 3 கடைக்கு 50 ஆயிரமும், 12 கடைக்கு 45 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.29 கடைகளில் மாத வாடகையாக 2 ஆயிரத்து 700 ரூபாயில் தொடங்கி அதிக பட்சமாக 17 ஆயிரத்து 600 வரைக்கும் ஏலம் போனது. மேலும் இரு சக்கர வாகன நிறுத்தத்திற்கு வைப்புத்தொகை 50 ஆயிரம் போக மாத வாடகையாக 19 ஆயிரத்து 250 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கட்டண கழிப்பறைக்கு வைப்புத்தொகை 50 ஆயிரம் போக மாத வாடகையாக 17 ஆயிரத்து 300 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.சாமான்கள் பாதுகாப்பறைக்கு மட்டும் டெபாசிட் தொகையாக 10 ஆயிரமும், மாத வாடகையாக 6 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது. சைவ, அசைவ உணவு விடுதி என இரண்டு கடைகளுக்கு ஏலம் எடுக்க ஆள் இல்லாததால் அவை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.