தினமணி 27.04.2010
மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர்
திருச்சி, ஏப். 26: திருச்சி மாநகரிலுள்ள குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் குடிநீர் இணைப்பு மூலம் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோடைக் காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு வராமல் தடுக்க தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாநகராட்சியால் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்கப்படுகிறதா என சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் சில பகுதிகளில் குடிநீர் இணைப்பில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதாக புகார்கள் வருகின்றன. இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கை கண்டறியப்பட்டால், மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.