தினமணி 28.04.2010
உடுமலை நகராட்சியிடம் ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை
உடுமலை,ஏப்.27: மூன்றாவது குடிநீர்த் திட்டத்தில் உடுமலை நகரை ஒட்டிய 3 ஊராட்சிகள் தங்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்களான கி.தனபா க்கியம் (கணக்கம்பாளையம்) ஆர்.முருகேசன் (பெரியகோட்டை), எஸ்.மல்லிகா (போடிபட்டி) கையெழுத்திட்டு தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ள மனு விபரம்:
உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உடுமலை நகராட்சி எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ள கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி ஆகிய மூன்று ஊராட்சிகளில் கணக்கம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்று வருகிறோம். இந்த மூன்று ஊராட்சிகளும் நகரப் பகுதியை ஒட்டி வளர்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகளாகும். 1991ம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு குடிநீர் பெற்று வருகிறோம். கடந்த 2003 ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட கணக்கம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர் எங்களது ஊராட்சிகளுக்கு போதுமானதாக இல்லை. கூடுதல் மக்கள் தொகை, அன்றாடம் உருவாகும் புதிய குடியிருப்புகள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நான்கு தினங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம். பற்றாக்குறைக்கு ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விநியோகம் செய்து வருகிறோம்.
இந்த கடுமையான குடிநீர் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க உடுமலைப்பேட்டை நகராட்சியின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள மூன்றாவது குடிநீர் திட்டத்தில் கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி ஆகிய ஊராட்சிகளையும் தற்போதைய மக்கள்தொகை குடியிருப்புகளின் எண்ணிக்கைகளை சேர்த்து திட்டத்தை வடிவமைக்கும்போது எங்களது ஊராட்சிகளை விடுபடாமல் சேர்த்து குடிநீர் வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். மேலும் நகராட்சி நிர்ணயம் செய்யும் மாதாந்திர கட்டணத் தொகையை செலுத்தவும் தயாராக உள்ளோம். அதற்கு ஆதரவாக எங்களது ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.