தினமணி 28.04.2010
நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை:ஆட்சியர்
நாகர்கோவில், ஏப். 27:கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நீல் நிலைகள், இயற்கை வளங்கள் நிறைந்த நிலங்களைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தை தொடர்ந்து முறையாக பேணவும், சுற்றுலா பயணிகள் இம் மாவட்டத்தின் வளங்களை முழுமையாக ரசித்து, மீண்டும் வரும் நிலையை உருவாக்கவும் ஏப். 22-ம் தேதியன்று உலக புவி தினத்தின்போது குப்பைகள் இல்லாத மாவட்டத்தை உருவாக்க முதல்படி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 56 பேரூராட்சிகள் மற்றும் 99 ஊராட்சிகளிலும் குப்பைகள் தேங்கியுள்ள நீர் நிலைகள், காலிமனைகள், பொதுஇடங்கள் மற்றும் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றிலுள்ள குப்பைகளை நீக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை 476 இடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு, மீதி இடங்களில் தேங்கியுள்ள குப்பைகளை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று ஏப். 30-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர் நிலைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டுதலும், கழிவுப் பொருள்களை வீசி எறிவதும், நடைமுறையில் உள்ள குற்ற விசாரணை முறை சட்டத்தின் பிரிவு 133-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார் ஆட்சியர்